கண்டமங்கலம் அருகே விவசாயிடம் ரூ.90 ஆயிரம் திருடிய புதுவை வாலிபர் கைது: மேலும் ஒருவருக்கு வலை வீச்சு
- பலராமன் (வயது 65). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு திருக்கனூரில் இருந்து திருக்கோவிலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணம் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் திருக்கனூர் அடுத்த சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 65). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு திருக்கனூரில் இருந்து திருக்கோவிலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திருமங்கலம் சுடுகாடு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கால் கழுவ சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணம் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கண்டமங்கலம் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்
.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த முத்துப்பிள்ளையப்பாளையம் ராஜேந்திரன் மகன் ராஜா (18) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜாவும், அவரது நண்பர் விழுப்புரம் முருகன் என்பவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை கைது செய்த கண்டமங்கலம் போலீசார், தலைமறைவாகியுள்ள முருகனை தேடி வருகின்றனர்.