கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
- கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
- 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின்பு காலை 9 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் சிலை முன்புள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது.
பின்பு மூலிகைகள், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திகடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிக் கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி நேற்று முதல் விரதத்தை தொடங்கினர். இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அம்மன் ரிஷபம், பூதம், யானை, அன்னப்பறவை, கேடயம், வெள்ளிக்குதிரை காமதேனு உள்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.