உள்ளூர் செய்திகள் (District)

கைத்தறி கண்காட்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். 

நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-12-23 08:13 GMT   |   Update On 2022-12-23 08:13 GMT
  • கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த கண்காட்சியில் சுமார் 25க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பின்னர் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கண்காட்சிகள் மூலம் மக்களிடம் கைத்தறி ஆடைகளுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. அதே போல் தற்பொழுது கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இக்கண்காட்சி நடைபெறுகின்றன.

இக்கண்காட்சி அதிகளவு பொதுமக்கள் அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் வருகை தந்து கடந்த ஆண்டைவிட அதிகளவு விற்பனை பெருகின்ற வகையில் கைத்தறி ஆடைகள் வாங்கி ' எனது கைத்தறி எனது பெருமை " என்ற நிலையை உருவாக்கி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கைத்தறித் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், மேகனா, கைத்தறி துறை ஆய்வாளர் ரத்தின பாண்டியன், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் அய்யான், சங்கீதா மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News