உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி

Published On 2023-06-04 09:03 GMT   |   Update On 2023-06-04 09:03 GMT
  • செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.
  • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டோமினிக், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்

கோவை,

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டோமினிக் (வயது 22). இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 9-ந் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆன்லைன் மூலம் வேலை செய்வது குறித்து குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கொடுக்கும் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழிமுறைகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக டோமினிக், அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை எதுவும் வரவில்லை. மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.

இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தொடர்ந்து பணம் செலுத்துமாறு கேட்டார். ஆனால் அவரால் பணம் செலுத்த முடியவில்லை. மேலும், அவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரால் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News