உள்ளூர் செய்திகள் (District)

நெல்லை அருகே கட்டு கட்டாக ரூ.60 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது

Published On 2024-08-06 05:33 GMT   |   Update On 2024-08-06 05:33 GMT
  • 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
  • போலீசார் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

களக்காடு:

மதுரையை சேர்ந்த கும்பல் ஒன்று நெல்லை மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு காரில் வருவதாகவும், அந்த கும்பல் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று இரவு மூன்றடைப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான போலீசார் மூன்றடைப்பை அடுத்த நெடுங்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கருப்பு நிற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்தபோது அந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை சோதனை செய்தபோது அந்த வாகனத்தின் பதிவெண் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது காரின் பின்புற இருக்கைக்கு அடிப்பகுதியில் ஒரு பெட்டியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனே அந்த பணத்தை போலீசார் எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த 3 பேரையும் பிடித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் வந்த கார் மற்றும் பதுக்கி வைத்திருந்த கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 42), அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டிய நகர் 5-வது தெருவை சேர்ந்த சீமை சாமி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இந்த கும்பல் சமீப காலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளது.

அதாவது ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறி நம்பவைத்து பணத்தை வாங்கி கொண்டு திரும்ப ரூ.2 லட்சம் வழங்கும்போது அதில் ஒரு கட்டு பணத்தில் மட்டும் நல்ல நோட்டுகளை வைத்துவிட்டு மற்ற கட்டுகளில் கள்ள நோட்டுகளை வைத்து வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த வகையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பண மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டதும், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று அங்கும் மோசடியில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அசல் நோட்டுகள் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 8 செல்போன்கள், அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அந்த கும்பலுக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்பவர்கள் யார்? அவர்களாகவே எந்திரம் மூலம் அச்சடிக்கிறார்களா? அப்படியானால் எங்கு வைத்து அதனை செய்கிறார்கள்? இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக முக்கிய பிரமுகர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News