உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி

Published On 2022-07-14 10:56 GMT   |   Update On 2022-07-14 10:56 GMT
  • சிவகங்கையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
  • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி வருகின்ற 28-ந்தேதி நடைபெற உள்ளது. அதன்படி காலை 9.30 மணியளவில் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கத்தில் போட்டி நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த பேச்சு போட்டியில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களில் இருவரை மட்டுமே தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே (பள்ளிக்கு ஒருவர் வீதம்) இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் வட்டார அளவில் இப்போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டிக்கு 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்க முடியும்.

போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்பம் பெற்று போட்டி நடக்கும் நாளன்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டிக்கான தலைப்பு போட்டி நிகழ்விடத்தில் நடுவர்கள் முன்பாக அறிவிக்கப்படும். வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News