கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
- இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார்.
- பேச்சுப் போட்டியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தருமபுரி,
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தர்மபுரி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் தருமபுரி அடுத்த பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலை நிமிரும் தமிழகம் என்ற லட்சியத்தை தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த விழாவில் தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.மனோகரன், அரசு சட்டக் கல்லூரி முதல்வர் சிவதாஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.