தாம்பரம் விற்பனை மையத்தில் தீவிபத்து- 30 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
- தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.
- கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.
தாம்பரம்:
தாம்பரம் மேம்பால அருகே பிரபல நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை மையம் இயங்கி வருகிறது. இன்று காலை ஊழியர்கள் விற்பனை மையத்தை திறந்து சுத்தப்படுத்திய போது முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிறுது நேரத்தில் தீ மளமளவென அந்த தளம் முழுவதும் பரவியது. இதில் அங்கு விற்பனைக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளிலும் தீ பரவி பற்றி எரிந்தது.
இதனால் விற்பனை மையம் முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 புதிய மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. அங்கிருந்த கம்ப்பூட்டர் உள்ளிட்ட பொருட்களும் நாசமானது. கீழ்தளத்துக்கு தீ பரவாததால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள்கள் தப்பியது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.