உள்ளூர் செய்திகள் (District)

சிவகிரி போலீசார் வாகன சோதனை: காரில் கடத்தி வந்த 69 கிலோ குட்கா பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2024-10-15 09:21 GMT   |   Update On 2024-10-15 09:21 GMT
  • காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 69 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதி வழியாக ஒரு வாகனத்தில் குட்கா கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சிவகிரி அருகே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டணம் விலக்கு பகுதியில் தனிப்படை போலீசார் மற்றும் சிவகிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிவகிரி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 69 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் இருந்தவர்கள் சங்கரன் கோவில் பந்தப்புளி மேலத் தெருவை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 40) மற்றும் பந்தப்புளி வடக்கு தெருவை சேர்ந்த பிரபு (32) என்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து தமிழக பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News