உள்ளூர் செய்திகள் (District)

பாலக்கோடு அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- 20 பேர் படுகாயம்

Published On 2024-10-15 09:36 GMT   |   Update On 2024-10-15 09:36 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
  • படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெள்ளிச்சந்தை:

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு தருமபுரி நோக்கி நெடுஞ்சாலையில் அரசு பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது.

தற்போது சாரல் மழை பெய்து வரும் காரணத்தினால் சாலைகள் மிகவும் வலுவலுப்பாக உள்ளன.

பாலக்கோடு அடுத்த கோடியூர் அருகே வந்த போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென டிரைவர் பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே வந்தனர்.

இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான அதே இடத்தில் தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழுவழுப்பான சாலையை மாற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக ஒசூர்-பாலக்கோடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News