உள்ளூர் செய்திகள் (District)

சென்னை விமான நிலைய மேம்பாலத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- இளம்பெண் பலி

Published On 2023-06-29 08:21 GMT   |   Update On 2023-06-29 08:21 GMT
  • செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரித்திஷ்கா (வயது23). இவர் நேற்று மாலை நண்பர்களான அனகாபுத்தூரை சேர்ந்த செல்வன்(26),கோபிநாத்(23) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நண்பரை பார்க்க சென்றார்.

பின்னர் இரவு 9 மணியளவில் அவர்கள் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். பிரித்திஷ்கா நண்பர்கள் இருவருக்கும் நடுவே அமர்ந்து பயணம் செய்தார். மீனம்பாக்கம் விமானநிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது அங்கு பேக்கரிக்கு பிஸ்கட், பிரட் சப்ளை செய்யும் வேன் ஒன்று பஞ்சராகி நின்றது. அந்த வேன் மீது பிரித்திஷ்கா மற்றும் வரது நண்பர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரித்திஷ்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் வந்த செல்வன், கோபிநாத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News