உள்ளூர் செய்திகள் (District)

கடனை வசூலிக்க வாலிபரை காரில் கடத்திய சென்னை கும்பல் கைது

Published On 2023-04-19 08:22 GMT   |   Update On 2023-04-19 08:22 GMT
  • சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது தெரிய வந்தது.
  • கைதான 3 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர்.

மதுரை:

சென்னையை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரை மாட்டுத்தாவணி எதிரே செயல்படும் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். இவரது உறவினர் நெல்லை மாவட்டம், முக்கூடலை சேர்ந்த முப்புடாதி மனைவி காளீஸ்வரி. இவர் தனது மாமா முருகனை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள லாட்ஜுக்கு சென்று சந்தித்தார். பின்னர் இருவரும் வெளியே வந்தனர்.

அப்போது 4பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. காளீஸ்வரியை கீழே பிடித்து தள்ளிவிட்டு முருகனை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து காளீஸ்வரி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர். இதில் சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது ஆனந்த் என்பவரது வீடு என்று தெரியவந்தது. அந்த வீட்டில் முருகனை மர்ம கும்பல் அடைத்து வைத்திருந்தது. அவரை போலீசார் மீட்டனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மணி, ஆனந்த், சுரேஷ்குமார், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 3 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி 48 மணிநேரத்தில் கடத்தல் கும்பலை பிடித்ததற்காக அவர்களுக்கு, மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News