துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது
- சம்பவ இடத்துக்கு ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
- மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி (வயது 48). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவை கிணத்துக்கிடவில் உள்ள ஒரு கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மகேந்திரன் (47) என்பவர் குடி போதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார்.
சடையாண்டி வீட்டின் அருகே அவர் சத்தம் போட்டு கொண்டு இருந்ததால் அவரும் அவரது மனைவியும் இதனை தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினர். மேலும் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்று விடுவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சடையாண்டி இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ளரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.