உள்ளூர் செய்திகள் (District)

திருவொற்றியூரில் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை

Published On 2023-11-05 10:17 GMT   |   Update On 2023-11-05 10:17 GMT
  • பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் பூஜை அறை உண்டியலில் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
  • கொள்ளை குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் விம்கோ நகர், அம்பேத்கார் நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். ஓய்வுபெற்ற போலீஸ்காரர். இவரது மனைவி ரமாதாயி. இவர்களது மகன் கவியரசன். மருமகள் பேச்சியம்மாள். இவர்கள் இருவரும் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். செல்லப்பாண்டியன் வீட்டின் கீழ் தளத்திலும், அவரது மகன் மற்றும் மருமகள் முதல் மாடியிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு செல்லப்பாண்டியன், வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி விட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் செல்லப்பாண்டியன் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் செல்லப்பாண்டியன் மனைவி ராமதாயியின் தலையணை அடியில் வைத்திருந்த பீரோவின் சாவியை நைசாக எடுத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் பூஜை அறை உண்டியலில் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

இன்று காலை செல்லப்பாண்டியன் எழுந்த பின்னரே வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. மாடியில் உள்ள அவரது மகன் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கொள்ளையர்கள் அங்கு செல்லவில்லை.

இது குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News