குன்னம் அருகே டிராக்டர் கவிழ்ந்து பிளஸ்-1 மாணவன் உடல் நசுங்கி பலி
- நகுல்ராஜ் டிராக்டருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
- தர்மராஜ் உள்ளிட்ட 3 சிறுவர்களும் லேசான காயத்துடன் தப்பினர். பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, மரவத்தூர் போலீஸ் சரகம், சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாளி கண்டபுரம் பகுதியில் வயல் உள்ளது. மகன் நகுல்ராஜ் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நகுல்ராஜ் தனது நண்பர்கள் தர்மராஜ் (16) மற்றும் இரண்டு சிறுவர்களுடன் அந்த வயலுக்கு சென்றார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை நகுல்ராஜ் ஓட்டிச் செல்ல அருகாமையில் தர்மராஜ் மற்றும் 2 சிறுவர்கள் உட்கார்ந்திருந்தனர்.
வயல் காட்டில் இருந்து சற்று தொலைவில் டிராக்டர் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஓடை பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் நகுல்ராஜ் டிராக்டருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
தர்மராஜ் உள்ளிட்ட 3 சிறுவர்களும் லேசான காயத்துடன் தப்பினர். பின்னர் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மாணவன் நகுல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.