உள்ளூர் செய்திகள் (District)

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி- போலீசார் கைது செய்தனர்

Published On 2023-05-07 10:35 GMT   |   Update On 2023-05-07 10:35 GMT
  • சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து சரவணகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர்.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வருகிறார். தினமும் பணி முடிந்த பிறகு கடையநல்லூரில் இருந்து அவர் வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்றிரவு 8 மணிக்கு கடையநல்லூர் அட்டைக்குளம் அருகே மாணவி நடந்து சென்றார். அப்போது மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் லாரியில் இருந்து இறங்கிய சேலத்தை சேர்ந்த டிரைவர் சரவணகுமார் என்பவர் திடீரென சாலையில் சென்ற மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து சரவணகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர். கடையநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். அவர் மீது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையே பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் அட்டை குளம் அருகே நிறுத்தப்படும் வாகனங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இங்கே எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News