உள்ளூர் செய்திகள் (District)

கீழ்புத்துப்பட்டு அகதி முகாமில் அனுமதி இன்றி தங்கிய இலங்கை மீனவர் கைது

Published On 2023-05-10 07:13 GMT   |   Update On 2023-05-10 07:13 GMT
  • கீழ்புத்துப்பட்டு அகதி முகாமிற்கு கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணிக்காக வந்தனர்.
  • குருகுலசிங்கத்தை கண்ட இன்ஸ்பெக்டர் ராபின்சன், நீ எவ்வாறு இங்கு வந்தாய்? கேட்டுள்ளார். அப்போது குருகுலசிங்கம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

வானூர்:

இலங்கையைச் சேர்ந்தவர் குருகுலசிங்கம் (வயது 46). இவர் தனது மனைவி, மகன், மகளுடன் கடந்த 2006-ம் ஆண்டு ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திற்கு அகதியாக வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு அகதி முகாமிற்கு குடும்பத்துடன் வந்தார்.

இங்கு பல்வேறு இடங்களில் பணி தேடினார். எங்கும் வேலை கிடைக்காததால், நானும், எனது மகனும் வெளிநாடு சென்று பணி செய்ய இருக்கிறோம். அதனால் எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்தார். இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 23-ந்தேதி குருகுலசிங்கம், அவரது மகன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சென்ற அவருக்கும், அவரது மகனுக்கும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இதனை அடுத்து இருவரும் இலங்கையில் உள்ள மீனவருடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். குருகுலசிங்கத்திற்கு மீனவர் ரூ,50 ஆயிரம் கூலி பாக்கி வைத்துள்ளார்.

இதையடுத்து, எனக்கு பணம் வேண்டாம், என்னை தமிழ்நாட்டில் இறக்கு விடு என்று குருகுலசிங்கம் மீனவரிடம் கேட்டுள்ளார். இதற்கு மீனவர் ஓப்புக் கொண்டார். இதனால் மகனை அங்கேயே விட்டு விட்டு மீனவரின் போட்டில் ஏறி ராமேஸ்வரம் வந்துள்ளார். அங்கிருந்து பஸ் ஏறி கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு முகாமிற்கு குருகுலசிங்கம் வந்தடைந்தார்.

கீழ்புத்துப்பட்டு அகதி முகாமிற்கு கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணிக்காக வந்தனர். அங்கு குருகுலசிங்கத்தை கண்ட இன்ஸ்பெக்டர் ராபின்சன், நீ எவ்வாறு இங்கு வந்தாய்? கேட்டுள்ளார். அப்போது குருகுலசிங்கம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News