உள்ளூர் செய்திகள் (District)

ஒகேனக்கல்லில் யானை மிதித்து முதியவர் பலி

Published On 2024-04-02 05:52 GMT   |   Update On 2024-04-02 05:52 GMT
  • ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி நெருப்பூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கொளந்தையப்ப கவுண்டர் மகன் மாதையன் (வயது 60). விவசாய கூலித்தொழிலாளி.

இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

அதேபோல் ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.

இந்த நிலையில் மாதையன் ஒகேனக்கல் பெரிய பள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை திடீரென அவரை தாக்கி உள்ளது. இதனால் மாதையன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் அடிபட்டு அங்கேயே பலியாகினார்.

இதை வனப்பகுதியில் இருந்த சிலர் பார்த்து ஒகேனக்கல் வனத்துறைக்கும், போலீசாருக்கும் நேற்று 4 மணி அளவில் தகவல் கொடுத்துள்ளனர். நேற்று மாலை வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு மாதையன் சடலத்தை மீட்க போராடியும் யானை மிகுந்த பகுதியாக உள்ளதால், முடியவில்லை.

எனவே இன்று காலை மீண்டும் ஒகேனக்கல் வனத்துறை மற்றும் போலீசார் உதவியுடன் மாதையன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்னர்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News