உள்ளூர் செய்திகள் (District)

தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி- ஹெல்மெட் அணிந்திருந்தும் தலைநசுங்கியது

Published On 2023-06-06 08:37 GMT   |   Update On 2023-06-06 08:37 GMT
  • விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

அம்பத்தூர்:

வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது34). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இன்று காலை 6.50 மணியளவில் ராமானுஜம் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார்.

பாடி மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமானுஜம் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனாலும் ஹெல்மெட் அவரது உயிரை காப்பாற்ற வில்லை. லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேகத்தில் ஹெல்மெட்டும் நசுங்கி உடைந்து போனது. ராமனுஜம் ஹெல்மெட் அணிந்த நிலையிலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News