உள்ளூர் செய்திகள் (District)

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ள நடவடிக்கை- பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார்

Published On 2022-11-02 09:27 GMT   |   Update On 2022-11-02 09:27 GMT
  • வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
  • முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

செங்கல்பட்டு:

மழை தீவிரம் அடைந்து உள்ளதை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1148 ஏரிகள் உள்ளது. இதில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 528 ஏரிகள் மற்றும் 2 தடுப்பணைகள் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மொத்த ஏரிகள் 620 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித மனித உயிர் சேதமோ, ஆடு, மாடுகள் உயிர்சேதமோ ஏற்படவில்லை. 6 குடிசைகள் சேதமடைந்துள்ளது. இவற்றில் ஒரு குடிசை முழுவதுமாகவும், 5 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்து உள்ளது.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. முகாம்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றின் மீது தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்கள் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

வாட்ஸ் அப் புகார் எண் -9444272345 கட்டணமில்லா தொலை பேசி எண்- 1077

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News