உள்ளூர் செய்திகள் (District)

கொள்ளையனின் கை, காலை கட்டிப் போட்டு நையப்புடைத்த பொதுமக்கள்

Published On 2024-09-17 06:03 GMT   |   Update On 2024-09-17 06:03 GMT
  • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
  • கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

திருவள்ளூர்:

திருவாலங்காடு அடுத்த மணவூர் ரெயில் நிலையம் அருகே சங்கமித்ரா நகர் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவு பூட்டை உடைத்தார். சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனது கை, காலைகட்டிப்போட்டு சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் கொள்ளையனை தாக்கியதால் அவன் நிலை குலைந்தான்.

தகவல் அறிந்ததும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் புட்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பது தெரிந்தது. அவர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கிராமமக்கள் தங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திருவலாங்காடு போலீஸ் நிலையம் அருகே திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

Tags:    

Similar News