உள்ளூர் செய்திகள் (District)

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி

Published On 2023-06-13 06:54 GMT   |   Update On 2023-06-13 06:54 GMT
  • விபத்தில் உயிரிழந்த நம்பிராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுன் கருப்பந்துறை ஜெயம் நகரைச் சேர்ந்தவர் இசக்கி நம்பிராஜன்(வயது 29). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை நம்பிராஜன் மோட்டார் சைக்கிளில் டவுனில் இருந்து பாளைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சீவலப்பேரி சாலையில் அவர் சென்றுள்ளார். சீவலப்பேரி சாலை மணிக்கூண்டு அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு சென்றபோது அவ்வழியாக செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நம்பிராஜன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து நெல்லை மாநகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நம்பிராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை நம்பிராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த நம்பிராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நம்பிராஜன் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News