வடபழனியில் சாலையை கடந்த போது கார் மோதி முதியவர் பலி
- அதிவேகமாக வந்த கால் டாக்சி முதியவர் மீது வேகமாக மோதியது.
- காரின் பதிவு எண்ணை கொண்டு தலைமறைவான கால் டாக்சி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை வடபழனி, துரைசாமி சாலை - சன்னதி தெரு சந்திப்பில் இன்று காலை முதியவர் ஒருவர் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். முதியவர் நேற்று இரவு 10மணி அளவில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த கால் டாக்சி முதியவர் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கால் டாக்சி டிரைவர் தனது காரிலேயே முதியவரை ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு கால் டாக்சி டிரைவர் தப்பி சென்று உள்ளார். இதனால் முதியவர் பரிதாபமாக இறந்து போனது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காரின் பதிவு எண்ணை கொண்டு தலைமறைவான கால் டாக்சி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த முதியவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.