உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் கார்களில் கடத்திய குட்கா பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2022-10-02 08:54 GMT   |   Update On 2022-10-02 08:54 GMT
  • 5 அட்டைப் பெட்டிகளில் சுமார் 98 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பெரவலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இனோவா கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது பின்னால் மற்றொரு ஹோண்டா கார் வந்தது. ஹோண்டா காரை ஓட்டி வந்த டிரைவர் போலீசார் வாகன சோதனை செய்வதை பார்த்தவுடன் வேகமாக தனது காரை திருப்பி வந்த வழியே திரும்பி சென்றார். இதைப் பார்த்த போலீசார் ஹோண்டா காரை பின்னால் துரத்திச் சென்றனர்.

அப்போது ஹோண்டா காரை ஓட்டி சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் கார் மோதி நின்றது. உடனே போலீசார் காரில் இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்து சோதனை செய்தனர். இந்த 2 கார்களிலும் சோதனை செய்ததில் 5 அட்டைப் பெட்டிகளில் சுமார் 98 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இதனை கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த முகேஷ் சொரடி (வயது 24) அசாராம் (31) அஜய், உத்தம் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து இவர்கள் குட்காவை பெங்களூரில் இருந்து விருத்தாச்சலம் வழியாக சேலத்திற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News