உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2023-09-23 07:56 GMT   |   Update On 2023-09-23 07:56 GMT
  • கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
  • நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மனைவி சுஜாதா (45). இவர்களுக்கு 16 வயது, 14 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து சுஜாதா 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வசித்து வருகிறார்.

சுஜாதா தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (32) என்பவருக்கு தனது 16 வயது மகளை கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மாங்காடு கோவில் வாசலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து 16 வயது சிறுமியின் உறவினர் 1098 சைல்டு லைன் எண் மூலம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் போலீசார் குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மற்றும் சிறுமியின் தாய் சுஜாதா ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் நாகராஜ், சுஜாதா ஆகிய 2 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News