உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

பெரியகுளம் அருகே கோவில் திருவிழாவில் வாலிபர் குத்திக்கொலை- உறவினர்கள் மறியலால் பதட்டம்

Published On 2023-10-12 06:33 GMT   |   Update On 2023-10-12 06:33 GMT
  • கோவில் திருவிழாவில் முன்விரோதத்தில் வாலிபரை ஒரு கும்பல் கத்தியால் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
  • வாலிபரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனி ரைஸ் மில் தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் இருளப்பன் (வயது34). இவர் சென்டிரிங் வேலை பார்த்து வந்தார்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் இருளப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இருளப்பனுக்கும், சிந்துவம்பட்டியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அதனை மனதில் வைத்து திருவிழாவுக்கு வந்த இருளப்பனிடம் கார்த்திக்ராஜா, முத்துராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இருளப்பனை கடுமையாக தாக்கினர்.மேலும் கத்தியால் குத்தியதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை தடுக்க வந்த செந்தில்குமார் என்பவரையும் அந்த கும்பல் தாக்கினர். இதனால் திருவிழாவிற்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ரத்த வெள்ளத்தில் இருந்த இருளப்பனை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருளப்பன் கொலை செய்யப்பட்டது தெரிய வரவே அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு எஸ்.பி. பிரவீன்உமேஸ் டோங்கரே தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்ைத நடத்தி கொலையாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிந்துவம்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முத்துராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த காமாட்சி, கோபி, பாலகிருஷ்ணன், பிரவீன்குமார், சாந்தகுமார், பாலா மற்றும் சிலரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருளப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பதட்டத்தை தணிக்க அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News