உள்ளூர் செய்திகள் (District)

நடுவீரப்பட்டு அருகே பதட்டம்: பயங்கர ஆயுதங்களுடன் ஊருக்குள் சென்று தாக்கிய 30 பேர் மீது வழக்கு: 2 பேர் கைது

Published On 2023-03-31 09:39 GMT   |   Update On 2023-03-31 09:39 GMT
  • கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
  • இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர்

கடலூர்:

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.

தாக்குதல்

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று ஒரு கும்பல் சன்னியாசி பேட்டை ஊர் பகுதியில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சென்று சரமாரியாக கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளை வீசினார்கள். இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். இதில் வீட்டின் ஓடுகள், டிராக்டர் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்ததோடு , பா.ம.க. பேனர் கிழிக்கப்பட்டன.

இத் தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட தலைவர்கள் தடா. தட்சிணாமூர்த்தி, நவீன் பிரதாப் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டனர்.

30 பேர் மீது வழக்கு

பின்னர் போலீசாரை முற்றுகையிட்டு சம்பந்த ப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் சன்னியாசிபேட்டையை சேர்ந்த மோகன் கொடுத்த புகாரின் பேரில் குயிலாப் பாளையம் காலனியை சேர்ந்த பிரதாப், சந்துரு உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரதாப் (24), சந்துரு (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சன்னியாசிப்பேட்டை மற்றும் குயிலாபாளையம் பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News