உள்ளூர் செய்திகள் (District)

உப்பளம் பகுதியில் உள்ள சகதி வழியாக வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ளும் காட்சிகள்.

தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் மாற்று பாதையை சீரமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை

Published On 2022-11-07 08:07 GMT   |   Update On 2022-11-07 08:07 GMT
  • மேம்பாலம் கட்டுவதற்காக ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
  • தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந் தேதி முதல் ராட்சத கான்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய இடத்திற்கு கூடுதலாக10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக பெட்ரோல் செலவும் ஆனது.

இந்நிலையில் தூரத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு வழியை கண்டுபிடித்தனர்.

அதன்படி மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் சாலையில் மறுபுறத்தில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் முடுக்குகாடு ஊர் வழியாக சென்று நடுநிலைப் பள்ளியை கடந்து சென்றால் துறைமுகச் சாலையில் மேம்பாலத்தின் மறுகரைக்கு சென்று விடலாம்.

இதனால் அவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் மிச்சமானது. ஆனால் இந்த முடுக்குகாடு ஊர் வழியாக செல்ல வேண்டும் என்றால் 300 மீட்டர் தூரம் உள்ள உப்பளம் பகுதியை கடந்த செல்ல வேண்டும் இந்த உப்பள பகுதி மணல் சாலையாகும்.

தற்போது தொடர் மழையின் காரணமாக அந்த மணல் சாலை சகதி குளமாக மாறியுள்ளது. அதிக தூரத்தை கடந்து செல்ல விரும்பாதவர்கள் இந்த சகதி குளம் வழியாக துணிந்து சென்று வருகின்றனர். பயணத்தின் போது பலர் சகதியில் விழுந்து எழுந்து செல்கின்றனர். பலர் காயமடைந்து செல்கின்றனர்.

மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் வருகிற 11-ந் தேதி வரைக்கும் இந்த பயணம் தொடரும் என கூறப்படுகிறது.

எனவே வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அலுவலகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News