அரசு நிலத்தில் டன் கணக்கில் மரங்களை வெட்டி கடத்த முயன்றவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
- வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
- மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.
தொப்பூர்:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே டொக்குபோதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட தின்ன கொல்லை கிராமத்தில், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலத்தில், சம்பவத்தன்று சட்ட விரோதமாக மர்ம நபர்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல், மரம் அறுக்கும் எந்திரங்கள் கொண்டு, டன் கணக்கிலான, மரங்களை வெட்டி கடத்துவதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்பேரில், கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, டன் கணக்கில் வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், அனுமன் நகரை சேர்ந்த தொழிலாளியான சண்முகம் (வயது50) என்பவர், சட்ட விரோதமாக, அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த டன் கணக்கிலான மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தது தெரிய வந்தது.
பின்னர் மரங்களை வெட்டி கடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட சண்முகத்திற்கு, ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர்.