உள்ளூர் செய்திகள்

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

Published On 2024-06-28 10:30 GMT   |   Update On 2024-06-28 10:30 GMT
  • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

திருப்போரூர்:

சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி சத்யாவை கிரேன் மூலம் மலர் தூவி வரவேற்று உள்ளனர்.

இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலை ரிசார்ட்டுக்கு விரைந்து வந்தனர். இதற்குள் சத்யாவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து காரில் தப்பிசென்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி சத்யாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அவர் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதல் பலத்த காயம் அடைந்த சத்யாவை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News