உள்ளூர் செய்திகள் (District)

கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-10-24 08:12 GMT   |   Update On 2023-10-24 08:12 GMT
  • ஆந்திராவை சேர்ந்தவர் கைது
  • ஆட்டோ பறிமுதல் செய்து விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி சேகரிக்கப்பட்டு கர்நாடகம் மற்றும் ஆந்திராவிற்கு விற்கப்படுகிறது. இதனால் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட பகுதி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை பணிகளை தீவிர படுத்த குடிமை பொருள் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியில் குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அவ்வழியாக வந்த 1 ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது இதனை தொடர்ந்து ஆட்டோவில் கடத்தப்பட்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் ராமகுப்பம் பகுதியை சேர்ந்த வாசு (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News