உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் வீட்டில் நகை, பணம் திருடிய இளம் ஜோடி

Published On 2023-07-14 09:12 GMT   |   Update On 2023-07-14 09:12 GMT
  • வீட்டை சுற்றி பார்ப்பதாக கூறி கைவரிசை
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், கசிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், இவரது மனைவி கலைச்செல்வி சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். வீட்டில் இளங்கோவின் தந்தை குப்பன் (75) தாய் சாந்தி(70) ஆகியோர் மட்டும் இருந்தனர்.

அப்போது, இளங்கோவின் வீட்டுக்கு இளம்பெண்ணுடன் வந்த ஒருவர் குப்பனிடம், "உங்கள் மகன் இளங்கோவுடன் பள்ளியில் ஒன்றாக நானும் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்" என தன்னை அறிமுகப்படுத்தி க்கொண்டு முதியவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

இதை உண்மை என நினைத்த குப்பன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துள்ளார். அப்போது, வீட்டை சுற்றி பார்ப்பதாக கூறிய அவர்கள் சிறிது நேரம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வீட்டை சுற்றி பார்த்துவிட்டு சென்றனர்.

அதன்பிறகு, குப்பன் வீட்டில் இருந்த ஓர் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறந்து கிடந்தது. உடனடியாக அதை சோதனை செய்து பார்த்தார்.

அப்போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுப்போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் இளங்கோ புகார் செய்தார். அதன்பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் வீட்டில் நூதன முறையில் கைவரிசை காட்டிய அந்த இளம் ஜோடி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News