உள்ளூர் செய்திகள் (District)

20 ஆண்டுகளாக பெண்களுக்கு கருகலைப்பு

Published On 2023-10-16 08:08 GMT   |   Update On 2023-10-16 08:08 GMT
  • 5 பேர் கும்பல் கைது
  • வாகனங்கள் மூலம் கிராமங்களுக்கு சென்று பரிசோதனை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பேராம்பட்டு கிராமத்தில் உள்ள குடிசை வீடு ஒன்றில் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வதாகவும், பெண்ணா இருந்தால் கருகலைப்பு செய்வதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாவட்ட போலீஸ் துறையினர் உதவியுடன் அந்த குடிசை வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் தரகர் ஆகியோர் இருந்தனர்.

போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்ட தரகர் சங்கர் ( வயது 45) என்பதும், இவர் திருப்பத்தூரில் இயங்கி வரும் சுகுமார் ஸ்கேன் மையத்தின் தரகர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சங்கரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கேன் மையத்தின் உரிமையாளர் சுகுமார் உள்பட 4 பேர் தலைமறை வாகினர். இவர்களை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை யிலான தனிப்ப டை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஸ்கேன்மைய உரிமையாளர் சுகுமார் (55), வேடியப்பன் (42), விஜய் (27), சிவா (36) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ஸ்கேன் மைய உரிமை யாளர் சுகுமாரின் மகள் மற்றும் மகன் ஆகியோர் டாக்டராக வேலை செய்து வருகின்றனர். இவர் மீனாட்சி தியேட்டர் எதிரே அலுவலகம் வாடகை எடுத்து அதில் கருக்கலைப்பு மற்றும் குழந்தை பாலினம் கண்டறிவதை செய்து வந்தார்.

அப்போது சப்- கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தை மூடி சீல் வைத்து சுகுமாரை கைது செய்தனர். சுகுமார் ஏற்கனவே 5 முறைக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு சென்று ஸ்கேன் செய்வது, கல்கலைப்பு செய்வது போன்ற சம்பவங்களில் தொடர்ந்த ஈடுபட்டு வந்தார்.

ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருகலைப்பு செய்துள்ளார். அதேபோல் வேடியப்பனும் ஏற்கனவே 2 முறை கருகலைப்பு சம்மதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு யாரோ பின்பலம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News