உள்ளூர் செய்திகள் (District)

ரெயில் மோதி சிறுவன் பலி

Published On 2023-11-13 08:04 GMT   |   Update On 2023-11-13 08:04 GMT
  • தந்தையுடன் பட்டாசு வாங்க சென்றபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நேபாளத்தை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 30). இவா காவலாளியாக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் அருகே உள்ள சோலூர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் விமல் குமாரின் மகன் விஷால் (7) பட்டாசு வாங்கி தரும்படி கேட்டார். அதன்படி விமல் குமார் மகன் விஷாலை கடைக்கு அழைத்துச் சென்று பட்டாசுகளை வாங்கி கொடுத்தார்.

பின்னர் தந்தை மகன் 2 பேரும் வீட்டுக்கு செல்லும்போது, ஆலங்குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயில் சிறுவன் விஷால் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே நடந்த சம்பவத்தை பார்த்து விமல் குமார் கதறி அழுது துடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை கண் முன்னே மகன் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News