உள்ளூர் செய்திகள் (District)

போலீஸ் குடியிருப்பில் திருடிய வாலிபர் கைது

Published On 2023-08-21 09:16 GMT   |   Update On 2023-08-21 09:16 GMT
  • பட்ட பகலில் கதவை உடைத்து துணிகரம்
  • ரோந்து பணியில் சிக்கினார்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீசார் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் மகள் நந்தினி (வயது 31). இவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் கபோர்டை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, குற்றப்பிரிவு போலீசார் விஜயரங்கன், சவுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று அண்ணான்டப்பட்டி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

வாலிபரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வ.உ.சி.தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பதும், இவர் போலீஸ் குடியிருப்பில் புகுந்து நந்தினி வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் இவர் மீது சேலம், திருப்பூர், தருமபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News