திருப்பூரில் கார் மீது சாய்ந்து விழுந்த மின்கம்பம் - 4பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர்.
- கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியில் சென்ற கண்டெய்னர் லாரி அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மீது உரசியது. இதில் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை மின்கம்பம் அருகே காரில் பயணிகள் 4பேர் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென மின்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4பேரும் உயிர் தப்பினர். மின்சாரம் இருந்த நிலையில் கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று மின்சாரத்தை துண்டித்தனர். போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவ இடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். நகர்ப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.