பல்லடம் அருகே மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
- பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
பல்லடம்:
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது . இதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் தரும் நிகழ்வை பல்லடம் வடுகபாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், மாவட்ட வழ்ங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 1135 ரேசன் கடைகள் உள்ள நிலையில் 1113 விண்ணப்ப பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற24 ந்தேதி முதல் ஆகஸ்ட் 4 ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
பொது மக்களின் வசதிக்காக அனைத்து முகாம்களும் ரேசன் கடைகளுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகள் , சமுதாய நலக்கூடங்கள் அல்லது அரசு கட்டடங்களில் நடைபெறும். விண்ணப்ப பதிவு முகாம்களில் ரேசன் கடை பணியாளர்கள் , இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள் , மகளிர் சுய உதவி குழுவினை சேர்ந்தவர்கள் என 7082 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். விண்ணப்பத்தினை பெற பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு நேரில் வரவேண்டிய தேவை இல்லை .இவ்வாறு அவர் தெரிவித்தார்.