உள்ளூர் செய்திகள் (District)

உடுமலை சின்னாறு சாலையில் உலா வரும் யானைகள் - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Published On 2022-06-05 10:38 GMT   |   Update On 2022-06-05 10:38 GMT
  • வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • போதை தலைக்கேறும் ஆசாமிகள், ஆர்வக்கோளாறு காரணமாக வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர்.

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் உடுமலை - மூணாறு ரோடு அமைந்துள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து எல்லைப்பகுதியான சின்னாறு சோதனைச்சாவடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு தமிழக வனப்பகுதியின் நடுவேநீள்கிறது.

இதனால் வனவிலங்குகள் பாதுகாப்புக்கருதி வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில்வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது, சமைத்தல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் வீசக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இருப்பினும் இந்த ரோடு வழியே செல்லும் சுற்றுலாப்பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். ரோட்டோரத்தில்அவ்வப்போது, வாகனத்தை நிறுத்துவதுடன் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவு எடுத்து வர பயன்படுத்திய பாலித்தீன் பைகள் ஆகியவற்றை விட்டுச்செல்கின்றனர்.

தற்போது யானைகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்வதால் வனத்துறையினர், வாகன ஓட்டுனர்களை 'அலர்ட்' செய்தும் வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

போதை தலைக்கேறும் ஆசாமிகள், ஆர்வக்கோளாறு காரணமாக வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படும்.

வன விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது. செல்போனில் செல்பி எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ரோந்துப்பணியில் இத்தகைய செயலில் எவரேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News