உள்ளூர் செய்திகள்

கோவை-மஞ்சூர் சாலையில் வாகனங்களை நிறுத்தி விலங்குகளை புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-06-08 08:54 GMT   |   Update On 2023-06-08 08:54 GMT
  • புகைப்படம் எடுத்தவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர், கோவைக்கு 3-வது போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கெத்தை வழியாக கோவைக்கு சென்று வருகின்றன. கோவையில் இருந்தும் தினசரி 4 தடவைகள் மஞ்சூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார்-சுற்றுலா வாகனங்களும் சென்று வருகிறது.

மஞ்சூர் போக்குவரத்து வழித்தடத்தில் உள்ள கெத்தை, அடர்ந்த வனப்பகுதி ஆகும். இங்கு பழ மரங்கள் அதிகம் உண்டு. எனவே இங்கு பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வன விலங்குளை பார்க்க முடியும். அந்த நேரங்களில் சாலையோரமாக திரியும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதற்காக அவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஒருசிலர் வனவிலங்குகளை நேரில் கண்ட பிரமிப்பில், அச்சத்துடன் கூச்சலிடுகின்றனர்.

இது விலங்குகளுக்கு தொந்தரவு தருகிறது. எனவே முள்ளி வழியாக, சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த வாகனங்கள் காரமடை மேட்டுப்பாளையம், காட்டேரி வழியாக ஊட்டிக்கு திருப்பி விடப்படுகிறது.

எனவே குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் வழியாக வரும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்தில் தற்போது 6 காட்டு யானைகள் கெத்தை பகுதியில் சாலையோரம் முகாமிட்டு உள்ளன. எனவே அவற்றை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

எனவே அவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் சாலையை கவனமாக பயன்படுத்தி, தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை விடுத்து வனப்பகுதியில் அத்துமீறி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News