முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட 1½ மாத பெண் குழந்தை சாவு
- முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட 1½ மாத பெண் குழந்தை இறந்தது
- மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மிகவும் சிரமப்பட்டது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வாழவந்தி கொல்லமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (வயது 21). சமீபத்தில் திருமணமான இந்த தம்பதியினர் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். இதற்கிடையே பவித்ரா கர்ப்பம் ஆனார். தாய் வீட்டில் இருந்த பவித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த 48 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. உரிய சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவித்ரா குழந்தையை பராமரித்து வந்தார். இதற்கிடையே டாக்டர்களின் அறிவுரைப்படி கடந்த 3-ந்தேதி வாழவந்தி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் குழந்தையுடன் பவித்ரா வீடு திரும்பினார். அப்போது முதல் குழந்தை அழுது கொண்டே இருந்தது.மேலும் குழந்தைக்கு கை, கால் பகுதிகளில் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டது.
அத்துடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மிகவும் சிரமப்பட்டது. இதையடுத்து ராஜகோபால், பவித்ரா இருவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தனர்.பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் ஜம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.