துறையூரில் காணாமல் போன செல்போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
- ஜெயஸ்ரீ கடந்த மாதம் 21ஆம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தனது கிராமத்திற்கு செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளார்.
- அவரது பையில் இருந்த சுமார் ரூ. 13,000 மதிப்புள்ள செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அபினிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது மகள் ஜெயஸ்ரீ (22). இவர் பிசிஏ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தனது கிராமத்திற்கு செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்பொழுது அவரது பையில் இருந்த சுமார் ரூ. 13,000 மதிப்புள்ள செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ, இது தொடர்பாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரியின் பேரில் துறையூர் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் சேனப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் ஜெயஸ்ரீயின் செல்போனை எடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த தவச்செல்வன் என்பவரிடம் 5000 ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து தவச்செல்வனிடம் இருந்த செல்போனை மீட்ட துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஜெயஸ்ரீ இடம் ஒப்படைத்தார். செல்போனை கண்டெடுத்த இளையராஜா மற்றும் செல்போனை வாங்கிய தவச்செல்வன் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.