உள்ளூர் செய்திகள் (District)

தொட்டியம் அருகே நீரில் மூழ்கிய மாமியாரை காப்பாற்ற முயன்ற மருமகன் சாவு

Published On 2023-01-21 08:19 GMT   |   Update On 2023-01-21 08:19 GMT
  • தொட்டியம் அருகே நீரில் மூழ்கிய மாமியாரை காப்பாற்ற முயன்ற மருமகன் பலியானார்
  • விஜயாவை காப்பாற்ற வந்த போது செந்தில்குமார் ஆழமான பகுதிக்கு சென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலமஞ்சமேட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பாலாஜி (வயது30). இவரது தம்பி கோகுல் மனைவி வளைகாப்பிற்கு சென்னை முகப்பேர் 13வது குறுக்குத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி விஜயா (48) மற்றும் இவரது மருமகன் காஞ்சிபுரம் மாவட்டம் புதிய பெரும் களத்தூர் சீனிவாசன் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்குமார்(30) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

செந்தில்குமார் சென்னையில் ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வளைகாப்பு முடிந்தவுடன் விஜயா, செந்தில்குமார், பாலாஜி மற்றும் அவரது நண்பன் தனசேகரன் ஆகியோர் ஸ்ரீராம சமுத்திரம் பெரிய வாய்க்காலில் குளித்துள்ளனர். இதில் விஜயா ஆழமான பகுதிக்குச் சென்று மாட்டிக்கொண்டு சத்தம் போடவே செந்தில்குமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் விஜயாவை காப்பாற்ற வந்த போது செந்தில்குமார் ஆழமான பகுதிக்கு சென்று எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

பின்பு அவர் ஸ்ரீராமசமுத்திரம் மருதாயி கோயில் அருகே பெரியவாய்க்காலில் பிணமாக மிதந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தாரணி தற்பொழுது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால் வளைகாப்புக்கு வரவில்லை. இதுகுறித்து விஜயா காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News