உள்ளூர் செய்திகள்

ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி திரட்டுவதாக நடித்து ஆறரைப் பவுன் நகை பணம் திருட்டு

Published On 2023-05-13 06:45 GMT   |   Update On 2023-05-13 06:45 GMT
  • தொட்டியம் அருகே நூதன திருட்டு
  • பெண் உட்பட 3 பேருக்கு வலை

திருச்சி,

தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கவரப்பட்டி குயவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ( வயது 40). இவர் பொன்னர் சங்கர் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பாலசுப்பிரமணி கரூர் மாவட்டம் பவித்திரத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். வீட்டில் அவரது மனைவி சரஸ்வதி தனியாக இருந்தார். காலை 11 மணியளவில் அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அவரிடம் ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி கேட்டு வந்தனர். அப்போது சரஸ்வதி வீட்டில் தமது கணவர் இல்லை. வெளியூர் சென்றிருக்கிறார். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள் என கூறிவிட்டு வீட்டின் முன்பக்க கதவை சாத்திவிட்டு அருகாமையில் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றார். பின்னர் மாடுகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ. 30,000 பணத்தை காணாமல் திடுக்கிட்டார். மேலும் பீரோவும் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் லாக்கரை பார்த்தபோது அதில் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. உடனே ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி கேட்டு வந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்து வெளியே வந்து பார்த்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.மாட்டு கொட்டகைக்கு சரஸ்வதி சென்ற உடனேயே வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று அந்த நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணி காட்டுப்புத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி திரட்டுவதாக நடித்து வீடு புகுந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News