உள்ளூர் செய்திகள் (District)

திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது - முகாமில் கலெக்டர் பேச்சு

Published On 2022-11-09 09:47 GMT   |   Update On 2022-11-09 09:47 GMT
  • சித்த மருத்துவ முறை மக்களிடத்தில் தற்போது வெகுவாக பின்பற்றப்பட்டு வருகிறது.
  • அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு, குணப்படுத்த முடியும் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சித்த மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி மற்றும் சித்த மருந்து பொருட்களின் கண்காட்சி அனைவரையும் கவரும் வண்ணம் இடம்பெற்று இருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு வருடங்களாக சித்த மருத்துவ துறையில் நடந்த மருத்துவத்துறை சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொகுத்து உருவாக்கப்பட்ட சாதனை மலர் புத்தகத்தை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டார்.

தொடர்ந்து முகாமில் கலெக்டர் குத்துவிளக்கேற்றி, பயனாளர்களுக்கு மருந்துகளை வழங்கினார். இம்முகாமில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முகாமில் கலெக்டர் மா.பிரதீப்குமார் பேசுகையில், சித்த மருத்துவ முறை மக்களிடத்தில் தற்போது வெகுவாக பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு, குணப்படுத்த முடியும் என்பது தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதலே மக்களுக்கு சித்த மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட சித்த மருத்துவத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டினார். இன்று நடைபெற்ற முகாமை பயன்படுத்தி கொள்ள அனைவரையும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை டாக்டர். தமிழ்க்கனி வரவேற்றார். டாக்டர் பாரதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் அறிவுரையின்படி டாக்டர்கள் அன்பரசு, சபரி, கவிதா, சங்கீதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News