சமயபுரம் கோவிலில் இருந்து உஜ்ஜயினி கோவிலுக்கு வஸ்திரம் மரியாதை
- சமயபுரம் கோவிலில் இருந்து உஜ்ஜயினி கோவிலுக்கு வஸ்திரம் மரியாதை அனுப்பி வைக்கபட்டது
- மங்களப் பொருட்கள் விமானம் மூலம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மண்ணச்சநல்லூர்,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள உஜ்ஜயினி என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக சக்தி வழிபாட்டு தலங்களுக்கு இடையே வஸ்திர மரியாதை அனுப்பி வைக்க அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.அதன்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சக்தி ஸ்தலமான ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோவிலுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் சார்பாக வஸ்திர மரியாதை செய்ய முடிவு செய்யப்பட்டது.இதையடுதுது சக்தி தலங்களிலே முதல் முறையாக 2023 ஆம் ஆண்டின் முதல் வஸ்திர மரியாதையானது சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடிமரம் முன்பாக வைக்கப்பட்டது.
அதில் பட்டுப்புடவை, மாலை, முந்திரி, திராட்சை, பிஸ்தா, தேன் உள்ளிட்ட நெய்வேத்திய பொருட்கள் மற்றும் மங்கள பொருட்கள் வைக்கப்பட்டு அவை பூஜிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த மங்களப் பொருட்கள் விமானம் மூலம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல், கோவில் குருக்கள் கணேசன் மற்றும் கோயில் காவலர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் ஸ்ரீ மஹா காளீஸ்வரர் கோவிலுக்கு வஸ்திர மரியாதையாக மங்கள பொருட்களை எடுத்துச் சென்றனர்.