உள்ளூர் செய்திகள்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் அலகு குத்தும் நிகழ்ச்சி

Published On 2023-03-29 09:46 GMT   |   Update On 2023-03-29 09:46 GMT
  • ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  • இதையொட்டி கடந்த வாரம் 21-ந் தேதி திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

சேலம்:

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் 21-ந் தேதி திருவிழா தொடங்கியது. எல்லையிடாரி அம்மன் கோவிலில் பூ சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

குழந்தை பாக்கியம் பெறவும், குடும்பத்தில் சந்தோசம் நிலவவும், திருமணதடை நீங்கவும் என பல்வேறு வகையான வேண்டுதலை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு, நேர்த்திக்கடனாக பக்தர்கள் முகம் மற்றும் முதுகின் பின்புறம் மிகவும் கூர்மையான கத்தியை குத்தி கொண்டும், நீளமான சூலத்தை வாயில் அலகு குத்திக் கொண்டனர்.

பட்டா கத்தி அலகு, விமான அலகு என பல்வேறு விதமான அலகுகளை உடலில் குத்திக்கொண்டு வின்சென்ட், குமாரசாமி பட்டி என நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

அப்பகுதியில் இருந்து ஏராளமான பகதர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அலகு குத்தும் பக்தர்களை கண்டு பரவசம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தீச்சட்டி ஏந்துதல் மற்றும் நாளை தீமிதி விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News