கோவையில் வி.சி.க. நிர்வாகி வீட்டில் நகை, பணம் கொள்ளை
- கேசவமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார்.
- அரை பவுன் தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி நகரை சேர்ந்தவர் கேசவமுருகன் (வயது60). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு மீண்டும் அவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு வீட்டில் பீரோவில் இருந்த அரை பவுன் தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.
இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டிற்குள் புகுந்து நகை பணத்தை திருடியது தெரியவந்தது.
கேசவமுருகன் இதுகுறித்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் வீட்டில் சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் பார்வையிட்டு, விசாரித்து வருகின்றனர்.