உள்ளூர் செய்திகள்

குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

Published On 2022-09-19 09:47 GMT   |   Update On 2022-09-19 09:47 GMT
  • குளிக்க சென்றபோது பரிதாபம்
  • விநாயகர் சிலைகள் கரைக்க பள்ளம் தோண்டியது தெரியாமல் சேற்றில் சிக்கினர்

வேலூர்:

வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் ரிக்க்ஷா காலனியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ஆகாஷ் (வயது 12), ஹரிஷ் (11).இவர்கள் இருவரும் அப்துல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் இமானுவேல் (13). காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவர்களின் தந்தைகள் இருவரும் வேலூரில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள். இந்த நிலையில் சிறுவர்கள் 3 பேரும் அங்குள்ள சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குட்டைக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.

வீட்டில் இருந்து சென்ற தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி சென்ற பெற்றோர், அங்குள்ள குட்டை பகுதியில் கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் இருந்ததை பார்த்தபோது அங்கு தங்களது குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற அச்சத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரில் தேடிய போது ஆகாஷ், ஹரிஷ் இருவரின் உடல்களும் கண்டு பிடிக்கப்பட்டது. பதறிப்போன அவர்கள் இருவரையும் தூக்கி கொண்டு பொய்கையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து இம்மானுவேல் உடலையும் மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.3 பேரின் உடல்களையும் பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் 3 சிறுவர்களும் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்கள் குளிக்கச் சென்ற குட்டையில் அடிக்கடி அவர்கள் குளித்துள்ளனர். அப்போது அந்த குட்டை ஆழமாக இல்லை. கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் கரைப்பதற்காக அந்த குட்டை ஆழப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சிறுவர்கள் குளித்த போது, அதில் இருந்த சேற்றில் சிக்கி இறந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News