- கொலையாளி மணப்பாறையில் கைது
- 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்
வேலூர்:
குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில்,துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (வயது 35) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.
அதில், கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த மற்றொரு ஹயாத் பாஷா (34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலை மறைவாக இருந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை சென்ற தனிப்படையினர் ஹயாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சமோசா வியாபாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தனது மனைவி குறித்து அவர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.