ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் தர்ணா பேராட்டம்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் தர்ணா பேராட்டம் நடத்தினர்.
- சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை, ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டு, டீ கிளாஸ், கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்தியதாகவும், அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய மறுத்த 8-ம் வகுப்பு மாணவியை முட்டி போடச்சொல்லி தண்டனை அளித்ததாக கூறி அதனை கண்டித்து நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.